Things to Do in the Examination Hall

Discover essential things to do in the examination hall to stay calm, manage time effectively, avoid mistakes, and perform your best during exams.


பரீட்சையில் வெற்றி பெற முக்கிய வழிகாட்டிகள்


1. நேர காலத்தோடு செல்க

பரீட்சை நடைபெறுமென நேரசூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு, குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்னரே பரீட்சை நடைபெறுமிடத்திற்கு சென்றுவிடல் வேண்டும். வீட்டிலிருந்து புறப்படும் போதே, பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்குத் தேவையான உபகரணங்கள் என்பனவற்றை எடுத்துக் கொண்டமையை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பரீட்சை நடைபெறுமிடத்திற்குச் சென்றவுடன், அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மண்டபத்தை தேடிச் சென்று, சுட்டெண் பொறிக்கப்பட்ட மேசையில் அமர்ந்து கொள்ள வேண்டும். நேரத்தை கணித்துக்கொள்வதற்கு கைக் கடிகாரமொன்றை கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.


2. மனதை அமைதிப்படுத்திக் கொள்க

பரீட்சை மண்டபத்தில் குழப்பமடைவதும், மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் பரீட்சையில் வெற்றிபெற உதவாது என்பதை உணர வேண்டும். தேவையற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

கற்ற பாடப்பரப்புக்குள் தான் வினாக்கள் வருவதால், கற்றவற்றில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். தெரியாத வினாக்களில் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேவையெனில் தண்ணீர் குடித்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.


3. சுட்டெண்ணை எழுதுக

வினாத்தாளை வாசிக்க ஆரம்பிக்கும் முன், விடை எழுதவிருக்கும் அனைத்து பத்திரங்களிலும் சுட்டெண்ணை தெளிவாக எழுதிவிட வேண்டும். இதனால் இறுதி நேர அவசரத்தில் தவறுகள் தவிர்க்கப்படும்.


4. அறிவுறுத்தல்களை கவனமாக வாசிக்க

வினாத்தாளில் உள்ள வினாக்களை வாசிக்கும் முன், முதலில் அறிவுறுத்தல்களை கவனமாக வாசிக்க வேண்டும். சில முக்கியமான தகவல்கள் அங்கே வழங்கப்பட்டிருக்கும். இதனால் தேவையற்ற வினாக்களை செய்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்கலாம்.


5. பல்தேர்வு வினாக்கள் எனின்

மிகப்பொருத்தமான ஒரு விடையை தேர்வு செய்ய வேண்டும். பொருத்தமில்லாத விடைகளை முதலில் நீக்குவதன் மூலம் சரியான விடையை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

தெரியாத வினாக்களில் நேரத்தை வீணடிக்காமல் அவற்றை வட்டமிட்டு பின்னர் முயற்சிக்க வேண்டும். உறுதியாக தெரிந்த விடைகளை உடனடியாக விடைத்தாளில் குறிக்க வேண்டும்.

மூன்று முறையும் முயற்சித்த பின்னரும் விடை தெரியாத வினாக்களில், சந்தேகத்திற்கிடமான விடைகளில் ஒன்றை தேர்வு செய்து எழுதுவது சிறந்தது.


6. அமைப்புக் கட்டுரை வினாக்கள் எனின்

இவ்வகை வினாக்களுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் விடையளிக்க வேண்டும். தேவையற்ற விளக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

இலகுவான மற்றும் நன்றாக தெரிந்த வினாவை முதலில் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். வினாத்தாளிலேயே விடையளிக்க முடிந்தால் அதையே பயன்படுத்த வேண்டும்.


7. கட்டுரை வினாக்கள் எனின்

ஒவ்வொரு வினாவையும் புதிய பக்கத்தில் தொடங்க வேண்டும். தெளிவான கையெழுத்தில் எழுதுவது அவசியம்.

படங்கள் மற்றும் அட்டவணைகள் பயன்படுத்தினால் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். இலகுவான வினாவை முதலில் தேர்வு செய்வது நல்லது.


8. மற்றவர்களை அவதானிப்பதைத் தவிர்க்க

மற்ற பரீட்சார்த்திகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதை தவிர்க்க வேண்டும். இது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


9. நேர்மையுடன் நடந்துகொள்க

பரீட்சை மண்டபத்தில் தவறான முறைகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நேர்மையாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம்.


10. உடன் வீடு செல்க

பரீட்சை முடிந்தவுடன் நேராக வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும். பிறருடன் விடைகளைப் பற்றி விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அடுத்த பரீட்சைக்கான மனநிலை சீராக இருக்கும்.

Post a Comment